இரண்டு ஆண்டுகளாகத் தினமும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடும் தமிழக கிராமம்
தமிழ் நாட்டில் ஒருநாள்கூடத் தவறாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் காலையில் ஊரின் மத்தியில் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடி தேசத்தை வணங்கும் கிராமம் சிறுதாமூர். செங்கற்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடியில், சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் திண்டிவனத்திற்கு முன்பு உள்ள சிறுதாமூர் கிராமத்திற்கு சாலை வசதியோ, பேருந்து வசதியோ இல்லை. அவசர மருத்துவ உதவிக்கென அரசின் ஆரம்ப சுகாதார நிலையமோ கிடையாது.
கல்வி வசதி உள்ளதா என்றால் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்புவரை ஒரே ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். நடுநிலைப்பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டும் என்பதால் மாணவிகளில் பெரும்பாலானோர் அய்ந்தாம் வகுப்போடு கல்வி கற்பதை நிறுத்திவிடுகின்றனர். அதனால்தான் இக்கிராமத்தில் பெண்களின் எழுத்தறிவு 26 சதவிகிதம் என்று புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது. .
தாங்கள் பயிரிடும் காய்கறிகள், தானியங்கள், மல்லிகை மலர்களை சுமந்து வணிகம் செய்ய சென்னை கோயம்பேடுவரை செல்ல பேருந்து இல்லாமல் அவதியுறும் விவசாயிகள் கிடைத்த குறைந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விளைபொருட்களை விற்கும் துயர சூழலும் தொடர்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆனபின்பும் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத சிறுதாமூரில் கடந்த 2018 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத் திருநாள் முதல் அனைத்து நாட்களிலும் தேசியக்கொடி ஏற்றி தேசியகீதம் பாடுகின்றனர் சிறுதாமூர் கிராம மக்கள். கிராமத்தின் மத்தியில் பெரியவர்களும் சிறுவர்களும் ஒன்றிணைந்து தினமும் தேசவணக்கம் செய்து வருவது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
சிறுதாமூர் கிராமத்தில் நடைபெற்ற 74 ஆவது சுதந்திரதின விழாவில் கிராம மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சமூக ஆர்வலர் திருமதி. சௌதாமணி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தினமும் தேசியக்கொடியேற்றி தேசிய கீதம் பாடும் சிறுதாமூர் கிராம மக்களைப் பாராட்டினார். மக்கள் ஒற்றுமையுடன் செயலாற்றினால் உலக சாதனைபுரிய இயலும் என்றும், சிறுதாமூர் கிராமத்தினரின் ஆர்வமும் மகளிர், மற்றும் இளைஞர்களின் ஆற்றலும் வியக்கவைக்கின்றன என்றும் மகிழ்ந்துரைத்தார். . மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், சிறுதாமூர் கிராம மக்கள் அவற்றின் மூலம் பயன்பெறும் காலம் வந்துவிட்டது என்றும், அதற்கான வழிமுறைகளையும் விளக்கிப் பேசினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த கிராமமாக சிறுதாமூர் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தினமும் காலையில் ஊரின் மத்தியில் தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடும் திட்டத்தை கவிஞர் விஜயகிருஷ்ணன் சிறுதாமூரில் செயல்படுத்தியுள்ளார்.
நூறாவது சுதந்திரத் தினத்திற்குள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா என்று தினமும் தேசியக் கொடிவணக்கம் செய்தபடி கேட்கின்றனர் சிறுதாமூர் கிராமப் பொதுமக்கள்.