சஸ்பெண்ட் செய்யாதது ஏன் கொதிக்கும் ஸ்டாலின்


அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்சூரப்பாவை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்


- இது குறித்து திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.


அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் – அந்தத் துணை வேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது


சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை - 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அ.தி.மு.க. அரசு? இந்த 9 மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன? என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும்; இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணை வேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.


கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, தி.மு.க. ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதே போ ஷல் அ.தி.மு.க. ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணை வேந்தராக இருக்கும்சூரப்பாவிற்கு மட்டும் ஏன் விதி விலக்கு? குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர்  கலையரசன் விசாரணை ஆணையம் நாளைய தினம் தனது விசாரணையைத் துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் - மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணை வேந்தரை உடனடியாக சஸ்பென்ட் செய்வதுதான் நேர்மையான - நியாயமான விசாரணைக்கு வழி விடும்.


ஆகவே அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்  சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி . பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.