1972 ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு பரபரப்பான சூழ்நிலையில் எம்ஜிஆர் அளித்த பேட்டி
சிவாஜியைத் தாக்கினீர்களா ?
#எம்ஜிஆரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் , அவற்றுக்கு அவர் சொன்ன பதில்களும் !
✅ ' இயற்கையான நடிப்புக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும் ; மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது ' என்று தென் இந்திய சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் தங்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் பேசினீர்கள் அல்லவா ? திரு . சிவாஜிகணேசனைத் தாக்கித்தான் நீங்கள் அப்படிப் பேசினீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே , அது உண்மையா ?
எம் . ஜி . ஆரின் பதில் :
இயற்கை நடிப்புக்குத்தான் எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று நான் குறிப்பிடும்போது , உடனடியாக திரு . சிவாஜிகணேசனைப் பற்றி ஏன் ஞாபகப்படுத்திக் கொள்கிறார்கள் ? அப்படியானால் , இவர்கள் திரு . கணேசன் இயற்கையை மீறி நடிக்கிறார் என்று கருதுகிறார்களா ? இப்படிப் பேசுவதன் மூலம் , சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் பெருமையை இவர்கள் களங்கப்படுத்த முயலுகிறார்கள் .
✅ உங்கள் படங்களில் சண்டைக்காட்சிகளில் , ஒரே ஆள் பத்து பேர பதினைந்து பேரை அடித்து வீழ்த்துவதாக வருகிறதே , இது இயற்கைக்கு மீறிய , மிகையான நடிப்பு இல்லையா ?
எம் . ஜி . ஆர் :
அபிமன்யு , பத்மவியூகத்துக்குள் நுழைந்து , ஒரே நேரத்தில் பல பேரைச் சாய்த்ததாகப் புராணத்தில் இருக்கிறதே , அதை ஏற்றுக்கொள்ளும்போது , வீரன் ஒருவன் 15 பேரை அடித்து வீழ்த்துவதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது ? நல்ல வீரன் 10 , 15 பேரைச் சமாளிக்கமுடியும் . ?
✅. உங்களுக்கும் திரு . சிவாஜி கணேசனுக்கும் நிரூபிப்பதற்காகவாவது , நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரே படத்தில் நடித்தால் என்ன ?
எம் . ஜி . ஆர் : ( சிரித்துக்கொண்டே ) :
எங்கள் இருவரையும் போட்டுப் படம் எடுத்தால் , அந்தப் படம் ஒழுங்காக வெளிவரும் என்று நீங்கள் உண்மையில் நம்புகிறீர்களா ? நானும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவன் . சிவாஜியும் படப் பிடிப்பின் நுணுக்கம் தெரிந்தவர் . காமிராவை எந்தப் பக்கமாக வைத்தால் , யாருக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று இரண்டு பேருக்குமே தெரியும் . அவருக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி காமிரா வைக்கப்பட்டால் நான்தான் ஒத்துழைப்பேனா ? அல்லது , எனக்கு முக்கியத்துவம் வரும்போது அவர்தான் ஒத்துழைப்பாரா ? படம்தான் ஒழுங்காக வெளிவருமா ? அப்படியே படம் முடிந்து வெளிவந்தாலும் , ஒரு காட்சியில் என்னைப் பார்த்துவிட்டு , என் ரசிகர்கள் கை தட்டுவார்கள் . அடுத்த காட்சியில் அவர் ரசிகர்கள் அவரைப் பார்த்துக் கை தட்டுவார்கள் . கைத்தட்டல் , கைகலப்பாக மாறி , தியேட்டரே ரத்த வெள்ளமாகி விடுமே !
✅ நீங்கள் ஒரு நடிகையை 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு , அவர் மற்ற நடிகர்களோடு நடிப்பதற்கு அனுமதி தர மறுத்ததாகவும் , அவர் இப்பொழுது மீறிவிட்டார் என்றும் பேசிக்கொள்கிறார்களே ?
எம் . ஜி . ஆர் :
ஏன் சுற்றி வளைக்கிறீர்கள் ? மஞ்சுளா என்றுதான் சொல்லுங்களேன் . அவர் மற்ற நடிகர்களோடு நடிப்பதற்கு நானேதான் ஊக்குவித்தேன் . என்னிடம் பயிற்சி பெற்ற நடிகை , பல நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றால் , எனக்குப் பெருமை
✅ நீங்கள் நடிக்கும் படங்கள் தயாராவதற்குத் தாமதமாகிறது என்றும் , அதற்கு நீங்கள்தான் பொறுப்பாளி என்றும் சொல்லுகிறார்களே ?
எம் . ஜி . ஆர் :
நான்தான் படம் தாமதமாவதற்கோ , அல்லது வேகமாக வளருவதற்கோ பொறுப்பாளி என்றால் , என்னுடைய சொந்தப் படமான ' உலகம் சுற்றும் வாலிபனை ' வெளியிட்டிருப்பேனே ! உண்மையில் நான் பல மாதங்களாகத் தயாரிக்கும் ' உலகம் சுற்றும் வாலிபன் ' , செப்டம்பரில்தான் வெளிவருகிறது . ஆனால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட உதயம் புரொடக்ஷன்ஸாரின் ' இதய வீணை ' தீபாவளி அன்று வெளிவருகிறது . எனவே , தாமதம் என்பது என்னால் ஏற்படுவதல்ல ; அது பல சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம் ! இல்லையா ?
ஊடகங்களுக்கு பேட்டி தந்த நாள்
06 - 08 -1972
நன்றி: இதயக்கனி விஜயனின் 'மதிஒளி' 15 -8 -1972 இதழிலிருந்து