தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை ; உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தேன் என்று முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார்
இது குறித்து முன்னாள் அமைச்சர் டாக்டர். பூங்கோதை ஆலடி அருணா வெளியிட அறிக்கை
19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து - என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு - மூளை, நெஞ்சு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
15 ஆண்டுகள் அரசியலில் - திமுக தலைவர் கருணாநிதி என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு கருணாநிதி என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல ஸ்டாலினும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு - சிகிச்சை பெற்று வருகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்